சென்னை: மதுரை ஆதீனத்தின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது; அதற்கு அவசியமும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆனது, எஸ்.டி.பி.,ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது பெரும்பாலான இடங்களில் அதிமுகவிற்கு டிடிவியின் அமமுக கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழனன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'டிடிவி.தினகரனை அதிமுகவில் இணைப்பதற்கான பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது; என்னைப் பொறுத்த வரை அது கண்டிப்பாக நடைபெறுமென்று நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது; அதற்கு அவசியமும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.