பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயகுமாருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பொள்ளாச்சியில் பல இளம்பெண்களுக்கு நடைபெற்ற பாலியல் கொடூரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்ட 4 பேரின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 2 வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருநாவுக்கரசுவிடம் சிபிசிஐடி போலீஸார் 4 நாட்கள் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் வரும் 25-ம் தேதிக்குள் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளனர்.