மதுரை: சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு மதுரையில் தேர்தலைத் தள்ளி வைக்கக் கோரிய மூன்று மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய ஒரு வழக்கும், பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி ஒரு வழக்கும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளில் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை பதில் மனுக்களை தாக்கல் செய்யய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது,.
அதன்படி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்த பதில் மனுக்களில் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் ஆனால் தேர்தலை தள்ளி வைக்க இயலாது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்ததன. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதம் சார்ந்த வழிபாடுகள் எப்படி ஒவ்வொருவருக்கும் கடமையாக உள்ளதோ, அதேபோன்று தான் தேர்தலில் வாக்களிப்பதையும் கடமையாகக் கருத வேண்டும் என கருத்து தெரிவித்து, வழக்கைத் தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமைக்கு (மார்ச் 22) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அதன்படி வெள்ளியன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுக்களை ஏற்றுக் கொள்வதாகக் கூறி, தேர்தலைத் தள்ளி வைக்கக் கோரிய மூன்று மனுக்களையும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.