பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 33 ஏழைக் குழந்தைகளுக்கு காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் இலவசமாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
மும்பையைச் சேர்ந்த சாஹாச்சாரி அறக்கட்டளை, சென்னையில் உள்ள ஐக்கிய கல்வி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து இந்த இலவச அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்த முகாமில் இதய பாதிப்பு, நரம்பு பிரச்னைகள், எலும்பு - மூட்டு நோய்கள், புற்றுநோய், காது-மூக்கு-தொண்டை பிரச்னை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சந்திரமோகன் கூறுகையில், பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் பிரியா ராமசந்திரன், ஸ்ரீராம், திருநாவுக்கரசு, லட்சுமி சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் இந்த முகாமில் கலந்துகொண்டு இலவசமாக குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர் என்றார்.