காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள் 15 பேர் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி: காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டி.சிவரஞ்சனி (27), பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் டி.சேகர் (37) ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தியிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பழனிவேல் (53), நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரா.மகேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் எம்.அந்தோணி (45), சுயேச்சை வேட்பாளர் பி.என்.கே.இந்தியன் (49) ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி: திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றிச் செல்வி (42), மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் மனுத் தாக்கல் செய்தார். அதேபோல், இந்திய குடியரசுக் கட்சியின் (அதவாலே பிரிவு) தமிழக மூத்த துணைத் தலைவர் ரவி நாராயணன்(40), பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அன்புச்செழியன் (48), தேச மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் நா.விக்கிரமன் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். அதேபோல், 3 பேர் மாற்று வேட்பாளர்களாக மனுத் தாக்கல் செய்தனர்.
பூந்தமல்லி பேரவைத் தொகுதி இடைத் தேர்தல்: பூந்தமல்லி சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் க.வைத்தியநாதன், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், திருவள்ளூர் சார்-ஆட்சியருமான ரத்னாவிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவரது மனைவி தங்கம் மாற்று வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அதேபோல், இந்த இடைத்தேர்தல் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி, பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னாவிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
மாவட்ட வருவாய் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்த ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு.