கோவை மாவட்டம், சூலூர் தொகுதி காலியானதாக சட்டப் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் அறிவித்தார். அவரது அறிவிப்பு தமிழக அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.கனகராஜ் உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை மரணம் அடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, சூலூர் தொகுதி காலியானதாக சட்டப் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் வெள்ளிக்கிழமை அறிவிப்புச் செய்தார். அவரது அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மூலமாக தில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்பின், காலியாக உள்ள சூலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் பற்றிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும்.