தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தல்களில் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் அவற்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி எனில் 40 பேரும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி எனில் 20 பேரும் நட்சத்திர பேச்சாளர்களாக பதிவு செய்யலாம்.
அரசியல் கட்சிகள் அளித்த பட்டியலின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
அதிமுக: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள் அன்வர்ராஜா, வைத்திலிங்கம், விஜிலா சத்யானந்த், அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வைகைச் செல்வன் உள்ளிட்ட 40 பேர்.
திமுக: திமுக சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்பட 40 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 40 பேரும் நட்சத்திர பேச்சாளர்களாக உள்ளனர்.
தே.மு.தி.க., சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட 40 பேரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருப்பூர் துரைசாமி, மல்லை சத்யா உள்பட 20 பேர் நட்சத்திர அந்தஸ்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
திமுக, அதிமுக கட்சிகளில் உள்ள கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.