மக்கள் நீதி மய்யத்தின் இறுதி வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை கோவையில் வெளியிடப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலில் இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் கோவையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட உள்ளார். இதில், ராமநாதபுரம் அல்லது தென் சென்னை தொகுதியில் கமல் போட்டியிடும் அறிவிப்பும் வெளிவர உள்ளது. அதைப்போல தேர்தல் அறிக்கையையும் கமல் வெளியிட உள்ளார்.
வளரும் தமிழகத்துடன் கூட்டணி: இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் வளரும் தமிழகம் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான உடன்பாட்டு ஒப்பந்தத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசனும், வளரும் தமிழகத்தின் தலைவர் பி.துரை அரசனும் கையெழுத்திட்டனர். சட்டப் பேரவை இடைத் தேர்தலில் வளரும் தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகளை கமல் ஒதுக்கியுள்ளார்.