பிரதமர் போட்டியிடும் வாராணசி தொகுதியில், விவசாய சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பிரதான கோரிக்கையான விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், தேசிய நதிகளை இணைக்கவேண்டும் , தனிநபர் காப்பீடு (இன்சூரன்ஸ்) உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தலைநகர் தில்லியில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 141 நாள்கள் போராட்டம் நடைபெற்றது. தற்போது, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்திரபிரதேச மாநிலம், வாராணசியில், பி.அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 111பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளனர். இதற்காக தமிழகத்தில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதி ரயிலில் வாராணசி புறப்பட்டு, 24ஆம் தேதி காலை வாராணசி சென்று, வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். பின்னர், அங்கு வீதிவீதியாக சென்று பிரசாரமும் செய்யவும் உள்ளனர்.
இத்தகவலை தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க, செய்தித் தொடர்பாளர் ந. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.