கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சூர்யபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பலரை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பண்டியராஜன், இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அந்த மாணவி படிக்கும் கல்லூரியின் பெயரையும் தெரிவித்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில் அந்த மாணவியின் பெயர், கல்லூரி பெயரும் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2 அதிகாரிகளின் செயல் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காவல்துறை டிஜிபியிடம் புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.