பயம் ஏற்பட்டதால் தேர்தலில் கமல் போட்டியிடவில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பயம் ஏற்பட்டதால் தேர்தலில் கமல் போட்டியிடவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
மக்களவை மற்றும் 18 பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கட்சியின் தலைவர் கமல் எந்த தொகுதியிலும் போட்டியிடாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல், ஒரு தொகுதியில் மட்டும் முடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே தாம் போட்டியிடவில்லை என விளக்கமளித்தார். இதனிடையே கமல் தேர்தலில் போட்டியிடாததை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விருதுநகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புழுவை விட்டு மீனை பிடிப்பதை போல புதிய நபர்களை இறக்கியுள்ளார் கமல். பயம் ஏற்பட்டதால் தேர்தலில் கமல் போட்டியிடவில்லை. ஈபிஎஸ், ஓபிஎஸ் சொன்னது போல் தேர்தல் பணி செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்றார்.