புது தில்லி: பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அடுத்த தீர்ப்பு வரும் வரை அவர் சிறைச் செல்ல தேவையில்லை என்றும், வழக்கு விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
1998-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகனூரில், கர்நாடக எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின் போது கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
மேலும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இத் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதில் இந்த வழக்கு விசாரணையின்போது பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில், இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு வந்ததுமே அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜிநாமா செய்துள்ளார். சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கப் பரிசீலிக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால், சிறப்பு நீதிமன்றம் விதித்த உத்தரவுக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி வினித் சரண் அறையில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, 3 ஆண்டுச் சிறை தண்டனையை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான மனு மீது தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அதுவரை சரணடைவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடரும் எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது, 3 ஆண்டு சிறைத் தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.