பெரம்பலூர்: மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான செவ்வாயன்று தாமதமாக வந்ததால், பெரம்பலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் அறிமுக விழா மற்றும் மாற்றத்தின் தொடக்க விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 19 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப் பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலைக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
ஏற்கெனவே முதல்கட்டமாக, 21 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது பட்டியலில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வி.அருள்பிரகாசம் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் போட்டியிட இயலாது என்று தெரியவது விட்டதால் மாற்று வேட்பாளராக செந்தில்குமார் என்பவர் இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டார்.
தமிழகமெங்கும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு செவ்வாயன்று கடைசி நாளாகும். இன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.
இந்நிலையில் மனு தாக்கல் செய்ய தாமதமாக வந்ததால், பெரம்பலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
செவ்வாய் மதியம் சரியாக 03.20 மணிக்கு செந்தில்குமார் தேர்தல் அலுவலரான பெரம்பலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் தாமதமாக வந்ததாகக் கூறி அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
கடைசி நேர மாறுதல் காரணமாக தேவையான ஆவணங்களை தயாரா செய்ய நேரமாகி விட்டது என்றும், அதனால் தாமதமாகி விட்டது என்றும் அவர் தெரிவித்தார். ஆனாலும் அவரை மனு தாக்கல் செய்ய அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதன் காரணமாக இந்த தேர்தலில் மனு தாக்கல் செய்ய தாமதமாக வந்ததால், போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ள முதல் வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.