தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் கடந்த ஓராண்டில் 9 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்ததாகப் புகார் எழுந்த நிலையில், அதற்கு காரணமானவர்களின் மருத்துவ பதிவுகளை ரத்து செய்யுமாறு சுகாதாரத் துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் முறையாக பரிசோதிக்கப்படுவதில்லை என்றும், அதன் காரணமாக சிலருக்கு ஹெச்ஐவி நோய்த் தொற்று ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அண்மையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணி ஒருவருக்கு ஹெச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே, கடந்த ஓராண்டில் மட்டும், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 9 கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனைகளில் ரத்தம் செலுத்தியதால் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் விசாரணை நடத்த சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு, தனது விசாரணை அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்ததாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இது தொடர்பாக ஓர் உத்தரவை சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் பேறு கால மரணங்கள் அலட்சியத்தின் காரணமாக நடைபெற்றிருப்பின், அதற்கு காரணமானவர்களின் மருத்துவப் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது குற்ற வழக்கு பதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.