அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வாகன தணிக்கையில் விலை மதிப்பற்ற சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கீழப்பழுவூர் அருகேயுள்ள அரியலூர் சாலையில் துணை வட்டாட்சியர் கனகராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10- க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் பல்வேறு உயரம் கொண்ட விநாயகர், புத்தர், மயில், நடராஜர், ஐயப்பன் என 148 சுவாமி சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிலைகளைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கோட்டாட்சியர் சத்தியநாராயணன் வசம் ஒப்படைத்தனர்.
மேலும், அந்த சிலைகளைக் கொண்டு வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரனிடம்(57) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிலைகள் ரூ.99 ஆயிரத்துக்கு வாங்கியதற்கான ரசீதை வைத்துள்ளார். சிலைகளின் மதிப்பு மேலும் அதிகமாக இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.