புது தில்லி: அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணையின் போது, காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
முன்னதாக, ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒரு கட்சிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், இரட்டை இலைச் சின்னம் குறித்த வழக்கு முடிந்து விட்டதால், பழைய முறைப்படி இடைக்காலச் சின்னம் வழங்க வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்பட்ட கட்சியா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதைக் கேட்ட டிடிவி தினகரன் தரப்பு வழக்குரைஞர், அமமுகவை கட்சியாகப் பதிவு செய்யத் தயார், ஆனால் தற்போது அதற்கான நேரம் இல்லை என்று கூறினர்.
பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி ஒரு பொதுச் சின்னத்தைக் கேட்கிறீர்கள்? என்றதற்கு,
அமமுகவை கட்சியாக இன்றைக்கே பதிவு செய்யத் தயார். கட்சியை இன்றே பதிவு செய்தால் குக்கர் சின்னம் வழங்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பொதுச் சின்னம் வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒரே நேரத்தில் இரட்டை இலைச் சின்னத்தையும், குக்கர் சின்னத்தையும் கோருவது ஏன்? என்று கேளவி எழுப்பினர்.
விசாரணையின் போது தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியதாவது, அமமுகவை கட்சியாக பதிவு செய்தாலும் உடனடியாக குக்கர் சின்னத்தை தர முடியாது என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
கட்சியைப் பதிவு செய்து 30 நாட்களுக்குப் பிறகுதான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும். எனவே, தினகரன் கட்சிக்கு உடனடியாக குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக அளிக்க முடியது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
தொடர்ந்து வாதம் நடைபெற்று வருகிறது.