அரசு மருத்துவமனையில் கருத்தடை அறுவைச் சிகிச்சையின்போது பெண் இறந்த விவகாரத்தில், 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய பொது சுகாதார இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடியைச் சேர்ந்தவர்கள் செந்தில்-ரோஜா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் கருவுற்ற ரோஜாவுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரோஜாவின் விருப்பத்தோடு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அவரை அறுவைச் சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர்கள் ரோஜா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ரோஜாவின் இறப்புக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சைதான் காரணம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்த செய்தி கடந்த 23 ஆம் தேதி நாளிதழில் வெளியானது.
இதனை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்தார். மேலும் இந்த விவகாரம் குறித்த விரிவான அறிக்கையை 3 வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறும் பொது சுகாதார இயக்குநருக்கு அவர் உத்தரவிட்டார்.