தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான, மூத்த வழக்குரைஞர் ஞானதேசிகன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு முறையீடு செய்தார். அதில், எங்களது தரப்பு கருத்தைக் கேட்காமல், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் என்ற நிபந்தனையுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே எங்களுக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதனையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக மனு தாக்கல் செய்தால், அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.