நடிகை நயன்தாராவைப் பற்றி தவறாகப் பேசியதாக நடிகர் ராதாரவியை திமுகவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
கொலையுதிர் காலம் திரைப்பட நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
நடிகர் ராதாரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் கண்டனம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் கூறியிருப்பது: பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.