முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்பரத்துக்கு மகனாக பிறந்ததால், பல விமர்சனங்களை தாம் எதிர்கொண்டு வருவதாக நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அறிவிக்கப்பட்டனர். சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் சிவகங்கையில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை முகுல் வாஸ்னிக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுதர்சனநாச்சியப்பன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் வருங்கால பிரச்னைக்கு இது காரணமாக அமைந்துவிடுமோ? என்று தோன்றுகிறது. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வருவதை ப.சிதம்பரம் தடுத்து இருக்கிறார். அமைச்சராகவும், கட்சியில் பல பொறுப்புகள் கிடைக்கவிடாமலும் எனது வளர்ச்சியை தடுத்துள்ளார்.
நான் அவரை தேர்தலில் தோற்கடித்தேன் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு காங்கிரஸ் மீதும், சிவகங்கை மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. சிவகங்கை மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் என்னுடைய பணியை தொடர்ந்து செய்வேன்.
ப.சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுக்கின்றனர். சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு அவர் எந்த நன்மையும் செய்யவில்லை. பல நாடுகளில் ப.சிதம்பரம் குடும்பம் சொத்துகளை சேர்த்து உள்ளது. கார்த்தி சிதம்பரம் ஒரு குற்றவாளியாக உள்ளதால் நீதிமன்றத்தில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை?. நீதிமன்ற வாசலுக்கு போக வேண்டியவர், வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப்போகிறது என்பது கஷ்டமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காரைக்குடியில் கூட்டணி கட்சியினர் இடையே கார்த்தி சிதம்பரம் பேசுகையில், ஒசாமா பின்லேடன் கூட சந்தித்திராத அளவுக்கு நெருக்கடிக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த கார்த்தி, ப. சிதம்பரத்துக்கு மகனாக பிறந்ததால் பல விமர்சனங்களை தாம் சந்திதித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், என்னை பலரும் விமர்சனம் செய்வதற்கு ஒரே காணம் உங்களுக்கு மகனாக பிறந்ததுதான் என தனது அப்பாவிடமே கூறியுள்ளதாக தெரிவித்த கார்த்தி, நேற்றுகூட ஒருவர் தன்னை விமர்சனம் செய்ததாகவும், அவருக்கும் எனக்கும் எதும் சண்டையா?, கொடுங்கல் வாங்கலில் பிரச்னையா? எதுவும் கிடையாது. என்ன காரணம். என் அப்பா சிதம்பரத்துக்கு நான் மகன் என்பதாலும், அவருக்கு நான் மகன் என்பதாலும் எனக்கு நிறைய சலுகைகள் வந்திருக்கு. அதேவேளையில் பலபேர் என்மீது தவறனா புரிதல் வைத்திருக்கிறார். அவர்கள் என்னை கார்த்தியாக மட்டும் பாருங்கள் என தெரிவித்தார்.