வேட்பு மனுக்களில் ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட தடை கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

தேர்தல் வேட்பு மனு ஏ, பி படிவங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஆகியோர் கையெழுத்திட தடை கோரி அக்கட்சியின்
வேட்பு மனுக்களில் ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட தடை கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு


தேர்தல் வேட்பு மனு ஏ, பி படிவங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஆகியோர் கையெழுத்திட தடை கோரி அக்கட்சியின் முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி தொடுத்த வழக்கில் தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதுதொடர்பாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே. சி. பழனிச்சாமி தில்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் வழக்குத் தொடுத்தார். அதில், 2017, செப்டம்பர் 12-இல் நடைபெற்ற கட்சியின் பொதுக் குழுவில் யாருடைய கருத்தையும் கேட்காமல் அதிமுக விதிகள் திருத்தப்பட்டன. அதிமுக சட்ட விதி 43-இன்படி விதிகளைத் திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுச் செயலாளர் நியமனம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும். இதன்படி, தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில் பொதுச் செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும். எனவே, மக்களவைத் தேர்தலில் வேட்பு மனு ஏ, பி படிவங்களில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், அவர்கள் கையெழுத்திடும் வேட்பு மனு ஏ மற்றும் பி படிவங்களை நிராகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஹரிகரன் ஆஜராகி, வேட்பு மனு ஏ, பி படிவங்களின் முக்கியத்துவத்தையும், அந்த படிவங்களில் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும் என்பதையும் எடுத்துரைத்தார். மேலும், இந்த வழக்கு தேர்தல் ஆணையம் தொடர்புடையது என்பதால் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உரிமை உள்ளது என்பதையும், அண்மையில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ போஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
 இதைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்குரைஞர் அமித் சிங் சத்தா ஆஜராகி, வேட்பு மனு ஏ, பி படிவங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கையெழுத்திடுவதை இதுவரை யாரும் ஆட்சேபிக்கவில்லை. இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்திலும் கே.சி. பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தவர். அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட விதிகள் திருத்தத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக 2018, அக்டோபர் 31-இல் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கே.சி. பழனிச்சாமி வழக்குத் தொடுக்கவில்லை. அவர் கட்சி விரோத நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்றார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட விதிகள் திருத்தம் உள்கட்சி விவகாரமாகும். இதில் தலையிட வேறு யாருக்கும் உரிமையில்லை. கே.சி. பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேண்டுமானால் அணுகலாம். இந்த விவகாரம் முழுக்க தனிநபர் சட்டம் தொடர்பானது. இதில் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, கே.சி. பழனிச்சாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி யோகேஷ் கண்ணா, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com