ஹெச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட விருதுநகர் பெண்ணின் கணவர், மூத்த குழந்தை ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த அப்பாசாமி, முத்துக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனு: ஹெச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட விருதுநகர் பெண்ணிற்கு முறையான
சிகிச்சையும் உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். ரத்த மாற்று சிகிச்சை மூலமாக ஹெச்ஐவி பரவுவதைத் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவும், ரத்த மாற்று சிகிச்சையை பாதுகாப்பானதாக மேற்கொள்ள தேவையான வசதிகளை அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்த வேண்டும். தானமாகப் பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பானதாகப் பெற முறையான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண், நீதிபதிகள் அறையில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தனது மூத்த குழந்தையைப் பார்க்க, அவரது கணவர் அனுமதிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இதனால் அவர் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவருகிறது. அவருக்கு சொந்தமாக வீடு, அரசு வேலை வழங்க வேண்டும். அவருக்கான இழப்பீட்டை, வைப்புத் தொகையாக வைத்து, அதற்கான வட்டிப் பணத்தை எடுத்து பயன்படுத்தும் வகையில் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அவரது மூத்த குழந்தை மார்ச் 27 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.