திருச்செந்தூர்: தனது மகள் கனிமொழி வெற்றிக்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் அவரது தாயாரான ராஜாத்தி சாமி கும்பிட்ட சுவராஸ்யம் நிகழ்ந்துள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த திமுக தலைவரான கருணாநிதியின் மகளான கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
மறுபுறம் அதிமுக கூட்டணியில் பாஜக மாநிலத் தலைவரான தமிழிசை சவுந்திரராஜன் அவரை எதிர்த்து களம் காண்கிறார்.
முதன்முறையாக கனிமொழி நேரடித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், தமிழிசையும் முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
எனவே இருவருமே வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 24-ஆம் தேதி திருச்சந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்த தமிழிசை, அங்கு நடைபெற்ற சத்ரு சம்ஹார யாகத்தில் பங்கேற்றார். இந்த யாகமானது எதிரிகளை
வீழ்த்துவதற்கு நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கிருந்த கோவில் யானையிடம் ஆசி பெற்ற அவர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
இந்நிலையில் தனது மகள் கனிமொழி வெற்றிக்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் அவரது தாயாரான ராஜாத்தி சாமி கும்பிட்ட சுவராஸ்யம் நிகழ்ந்துள்ளது.
தனது உறவினர்களுடன் கோவிலுக்கு வந்த அவர் அங்கு நடைபெற்ற பூஜையில் பங்கு பெற்றார் கனிமொழியின் வெற்றிக்காக அவர் வேண்டிக் கொண்டார் என்று தெரிகிறது.
வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு பேசிய கருணாநிதியின் மகளும், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவருமான கனிமொழியின் வெற்றிக்காக அவரது தாயார் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.