தமிழகத்தில் சேவை பெறும் உரிமைச்சட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மணவாளன் தாக்கல் செய்த மனு:
இந்தியாவில் 20 மாநிலங்களில் சேவை பெறும் உரிமைச்சட்டம் அமலில் உள்ளது. மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களுக்கு கிடைப்பதை சேவை பெறும் உரிமைச் சட்டம் உறுதி செய்கிறது. அச்சட்டத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு பெறவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், பிறப்பு இறப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வைகளுக்கு விண்ணப்பித்தால் 10 நாள்களில் கிடைக்கும். குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், பட்டா உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பித்தால் 30 நாள்களில் கிடைக்கும். ஆகவே, மக்களின் நலன் கருதி சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், அரசு தரப்பு வழக்குரைஞர், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே தொடரப்பட்ட பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்று கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.