பிரதமர் மோடியிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பதால்தான், எனது தந்தை ப. சிதம்பரம் மீதும், என் மீதும் மத்திய அரசால் பொய் வழக்குகள் போடப்படுகின்றன என்றார் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்
கிழமை நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்க வந்த அவர் அளித்த பேட்டி: எனது தந்தை ப. சிதம்பரம், மத்திய அரசை விமர்சித்து தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பி வருகிறார். அதனால்தான் அவர் மீதும், என் மீதும் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. எந்தத் தவறும் செய்யவில்லை. நாங்கள் இருவரும் குற்றமற்றவர்கள். வாரிசு அரசியல் என்று என் மீது தவறான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. நீண்ட காலமாக நான் அரசியலில் இருக்கிறேன். எனக்கு 11-ஆவது தேர்தல் இது. இத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றவுள்ளேன். நாங்கள் யாரையும் போட்டியாகக் கருதுவதில்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணி அமையும் போதெல்லாம் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அதேபோல, இந்தத் தேர்தலிலும் சிவகங்கை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மோடியைப் போல பொய் சொல்லமாட்டோம். விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்குவோம் என்றார் கார்த்தி சிதம்பரம்.
இதில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். ரகுபதி எம், பெரியண்ணன் அரசு , சிவ.வீ. மெய்யநாதன், கே.ஆர்.முத்துக்கருப்பன், காங்கிரஸ் எம்எல்ஏ- கே.ஆர். ராமசாமி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை. திவ்யநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்டச் செயலர் முருகேசன், மதிமுக மாவட்டச் செயலர் சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மு. மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.