காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் திட்டத்தின் மூலம் இந்திய மக்களிடமிருந்து வறுமை ஒழிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தையே மிகப்பெரிய அளவில் மாற்றி அமைத்தது. அத்தகைய திட்டத்தை நரேந்திர மோடி அரசு முறையாக செயல்படுத்தவில்லை.
100 நாள் வேலை திட்டம் என்பது நாடு முழுவதும் சராசரியாக 40 முதல் 45 நாள்களாக குறைக்கப்பட்டது. இத்தகைய போக்கு காரணமாக நரேந்திர மோடி அரசு வறுமை ஒழிப்பு முயற்சியில் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது.
இதிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய பொறுப்பை உணர்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவையாகும்.
இந்தத் திட்டத்தின்படி மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்தினரான 5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 25 கோடி மக்கள் பயனடையும் வகையில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வீதம் வங்கிக் கணக்கில் நேரிடையாகச் செலுத்தப்படும்.
இந்தத் தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில்தான் செலுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி, தகவல் அறியும் உரிமை, வேலை பெறும் உரிமை, கல்வி பெறும் உரிமை, உணவு பெறும் உரிமை, உரிய இழப்பீட்டோடு நிலத்தை வழங்கும் உரிமை போன்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்தது.
இத்தகைய சாதனைகளையொட்டி தற்போது ராகுல் காந்தி வறுமைக்கு எதிராக இறுதியான துல்லியத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்.
இந்த திட்டத்தின் மூலம் இந்திய மக்களிடமிருந்து வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அழகிரி கூறியுள்ளார்.