விதிகளை மீறியது தொடர்பாக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதுகுறித்து, அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம் ஆகியவற்றில் உள்ள விதிகளை மீறியதாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 44 வழக்குகள் 5 அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் மீது தொடரப்பட்டுள்ளன. அதன்படி, திமுகவினர் மீது 10 வழக்குகளும், அதிமுகவினர் மீது 9 வழக்குகளும், பாஜக மீது 2 வழக்குகளும், பாமக மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் மீது 3 வழக்குகளும், சுயேச்சைகள் மீது 20 வழக்குகளும் என மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனுமதி பெறாமல் வாகனங்களை இயக்கியது, போலியான வாக்குறுதிகளை அளித்தது, வாக்களிக்கப் பணம் கொடுப்பதாகக் கூறியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.