ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே 3 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அணிகளே வெற்றிபெறும் சூழல் உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவுக்குத் திறக்கவில்லை. அதிக அளவில் நெல்கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்.
கோடைக் காலங்களில் தண்ணீர் பஞ்சம் எப்படி வருமோ, அதேபோல தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆளுங்கட்சிதான் காரணம். அதிமுக அரசு மேலும் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.
முன்னதாக, ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு காங்கிரஸ் அறக்கட்டளையின் சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கே.எஸ்.அழகிரி வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், சு.திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாநிலப் பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.