திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம், 3 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் இருக்காது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:
மூன்று எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்வது அநீதி என திமுக கருதியிருந்தால், சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பே அத்தகைய நடவடிக்கை கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மனு அளித்திருக்க வேண்டும். நோட்டீஸ் அனுப்பிய பிறகு, பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சட்டப்படி கொண்டு வரமுடியாது. எனினும் திமுக அத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வருவோம் எனக் கூறுவது, 3 எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கையை இன்னும் துரிதப்படுத்துவதாகவே இருக்கிறது.
இதிலிருந்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், திமுகவுக்கும் தான் மறைமுக கூட்டணி இருப்பதாகத் தோன்றுகிறது. ஏற்கெனவே கூட்டுறவு சங்கத் தேர்தலில் பதவிகளை பங்கிட்டுக் கொண்டது, அரசு ஒப்பந்தப்புள்ளிகளில் திமுகவினருக்கு கிடைக்கச் செய்வதைப் போல அதிமுக- திமுக இடையேதான் மறைமுக ஒப்பந்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அமமுக கொடி தொடர்பாக ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இப்படியிருக்க அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் சட்ட அமைச்சர் மனு அளித்திருப்பது, நீதிமன்ற அவமதிப்பு போன்றது என்றார்.