ஓட்டப்பிடாரம் மக்களின் தேவைகளை முன்வைத்தே எனது பிரசாரம் இருக்கும்: கமல்
ஓட்டப்பிடாரம் மக்களின் தேவைகளை முன்வைத்தே தனது பிரசாரம் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், வரும் 19-இல் நடைபெறவுள்ளது.
இதில் ஓட்டப்பிடாரம் தனித் தொகுதியானது மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள வளரும் தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் எம்.காந்தி போட்டியிட உள்ளார். 4 தொகுதிகளுக்கான பிரசாரத்தை அதிமுக, திமுக கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
இதையொட்டி தூத்துக்குடி விமான நிலையம் வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஒட்டப்பிடாரம் மக்களின் தேவைகளை முன்வைத்தே எனது பிரசாரம் இருக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை சாடுவது எங்களின் நோக்கமல்ல. மற்றவர்கள் செய்ய தவறிய விஷயங்களை எங்களால் செய்ய முடியும்.
நீலத்தடி நீரை காப்பாற்றுவது குறித்து வல்லுநர்கள் மூலம் தொடர்ந்து முயற்சி செய்வோம். முனைப்பும், நேர்மையும் இருந்தால் முடியும் என்பதே எங்கள் உறுதிமொழியில் ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.