கோவை மார்ட்டின் நிறுவன காசாளர் தற்கொலை: வருமான வரித்துறையினர் மீது வழக்கு

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தவர் மேட்டுப்பாளையம் அருகே ஓடையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வருமான வரித்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மார்ட்டின் நிறுவன காசாளர் தற்கொலை: வருமான வரித்துறையினர் மீது வழக்கு

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தவர் மேட்டுப்பாளையம் அருகே ஓடையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வருமான வரித்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). இவர், கோவை, கவுண்டர் மில்ஸ் பகுதியிலுள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக கணக்காளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி,  2 மகன்கள் உள்ளனர்.  மகன்கள் இருவரும் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். 

இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள மார்ட்டின் நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி சோதனை நடத்தினர். கோவையில் வருமான வரித் துறை துணை இயக்குநர் சீனிவாசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வருமான வரித் துறையினர், பழனிசாமியிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.  அவரிடம் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனிசாமி திடீரென அங்கிருந்த கத்தியை எடுத்து தனது இடது கையின் மணிக்கட்டுப் பகுதியை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வருமான வரித் துறையினர் மார்ட்டினுக்கு சொந்தமான கல்லூரி, மில் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனிசாமி வீட்டுக்கு மே 1ஆம் தேதி சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள்,  மகன்கள், மனைவி முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.  

இந்நிலையில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வியாழக்கிழமை நள்ளிரவு பழனிசாமி வந்துள்ளார். 

பின்னர், வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அலுவலகம் செல்வதாகக் கூறி லுங்கியுடன் வீட்டைவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு பகுதியில் உள்ள ஓடையில் பழனிசாமி இறந்துகிடந்துள்ளார். 

தகவலின்பேரில் அங்கு சென்ற காரமடை போலீஸார் பழனிசாமி உடலைக் கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

மார்ட்டின் நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வரும் நேரத்தில் அந்நிறுவனத்தின் கணக்காளர் மர்மமான முறையில் இறந்துகிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடும்பத்தினர் சந்தேகம்: இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறியதாவது: 
 விசாரணை தொடங்கிய கடந்த 3 நாள்களாக பழனிசாமி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். வீட்டுக்கு வந்த அதிகாரிகள் சிலர் அவரைத் தாக்கினர். மறுநாள் விசாரணைக்குச் சென்றுவிட்டு பழனிசாமி வீடு திரும்பியபோது அவரது உடலில் அடித்து துன்புறுத்தியதற்கான காயங்கள் இருந்தன. இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர் திடீரென கிளம்பிச் சென்றார். பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டது. வருமான வரித் துறையினரின் விசாரணை முடிந்ததும் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.  அவரது சாவில் மர்மம் இருப்பதாக தோன்றுகிறது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தீர விசாரிக்கப்பட வேண்டும் என்றனர்.

வருமான வரித்துறை மறுப்பு
இந்நிலையில் பழனிசாமியை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கவில்லை என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: பழனிசாமியிடம் விசாரணை முடிந்து அவரை வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம்.

இதைத் தொடர்ந்து அவரை மீண்டும் வெள்ளிக்கிழமை ஆஜராக தெரிவித்திருந்தோம். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. விசாரணையின்போது அவரை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கவில்லை என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com