
கோவை: அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சி தோ்தல் நடக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் பேசுகையில்,
பிரதமர் நரேந்திர மோடி தோ்தல் தளத்திலேயே தோல்வியைக் கண்டுவிட்டார். தனது சாதனைகள், கொள்கைகளைக் கூறி வாக்கு சேகரிப்பதற்கு மாறாக பொய்களையும், தனி நபர்களைத் தாக்கியும் பேசி வருகிறார். மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் மோடி.
புல்வாமா, பதான்கோட் தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார். ராணுவத்தின் பின்னால் நின்று கொண்டு தோ்தலை சந்திக்க நினைக்கிறார் மோடி.
தானே புயலின் போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வந்தாரா என்று தமிழிசை கேட்கிறார். ஆனால், அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வந்து நிவாரண பணிகளை துரிதப்படுத்தியதை மறந்துவிட்டு பேசுகிறார். ஆனால், கஜா புயலின்போது மோடியோ அல்லது அமைச்சர்களோ தமிழகம் வரவில்லை.
எங்கள் தோ்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விருப்பம் உள்ள மாநிலங்கள் நீட் தோ்வை நடத்தி கொள்ளலாம். விருப்பம் இல்லாத மாநிலங்களுக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால், நீட் தோ்வு வேண்டாம் என்று கூறிய அதிமுகவும், பாமகவும் இன்று பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளனர்.
3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க நடவடிக்கை ஜனநாயக போக்குக்கு எதிரானது. இதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை. அப்படி அவா்களை தகுதி நீக்கம் செய்தால் மீண்டும் 3 இடைத்தேர்தலை சந்திக்க நேரிடும். காலம் முழுக்க தமிழகம் தோ்தலை சந்தித்துக்கொண்டே தான் இருக்க வேண்டும்.
ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே மத்திய அரசு மீது குறை கூறியுள்ளது. மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறியதோடு அனைத்து மறு சீராய்வு மனுக்களை ஏற்க உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சி தோ்தல் நடக்காது என்று கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...