தூத்துக்குடி: 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கே தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் ஸ்டாலின் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.
ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக தூத்துக்குடி ஸ்பிக் நகரில் திங்களன்று திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:
ஸ்டாலினுக்கு இணையான ஓர் அரசியல் தலைவர் தற்போது தமிழகத்தில் இல்லை.
இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கே தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் ஸ்டாலின்.
இந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடியா? ராகுலா? என்ற ஒரு விவாதம் வந்ததற்கு ஸ்டாலின் தான் காரணம். அவர் மட்டும் ராகுல் பெயரைக் குறிப்பிடாவிட்டால் போட்டியே மாறியிருக்கும்.
தலைவர் ஸ்டாலினை தலைகுனிய வைக்கமாட்டோம் என நீங்கள் அனைவரும் உங்கள் தாய் மீது சத்தியம் செய்து களத்தில் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் களத்தில் பணி சிறப்பாக இருக்கும்.
நமது கட்சியில் உள்ள பூசல்களை எல்லாம் தேர்தல் முடியும்வரை மறக்க வேண்டும்.
உங்களக்கு வேண்டுமென்றால் தேர்தல் முடிந்தபின்னர் நானே வந்து ஒரு குரூப் பாலிடிக்ஸை உருவாக்கி தருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.