மேட்டுப்பாளையம், குன்னூர் மலைப் பாதையில் 2- ஆவது கொண்டை ஊசி வளையில் காட்டு யானை நடமாட்டத்தால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி யானை, மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள், குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் நுழைந்து, விவசாயப் பயிர்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் மேட்டுப்பாளையம், பர்லியாறு மலைப் பாதையில் 2-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் காட்டு யானை ஞாயிற்றுக்கிழமை நடமாடிக் கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி யானையை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். இதையடுத்து சுமார் அரை மணிநேரத்துக்குப் பின்னர் யானை வனப் பகுதிக்குள் சென்றது. இதனால், இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.