கோடை விடுமுறையை முன்னிட்டு கூடலூர் பகுதியிலுள்ள ஊசிமலை காட்சி முனையைக் கண்டு களிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் - உதகை சாலையிலுள்ள ஊசிமலை காட்சி முனை உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் காட்சிமுனையிலிருந்து பார்த்தால் கூடலூர் நகரம், அதன் சுற்றுப்புற பகுதிகள், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி ஆகியவற்றை ஒருசேரக் காண முடியும்.
இப்பகுதி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளதால் கேரளம், தென் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் உதகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த காட்சிமுனைக்குச்சென்று இயற்கை அழகைப் பார்த்து ரசித்துவிட்டுச் செல்வது வழக்கம். தற்போது கோடை தொடர் விடுமுறை காரணமாக ஊசிமலை காட்சிமுனைப் பகுதி சுற்றுலாப் பயணிகளின் வருகையால் களைகட்டியுள்ளது.