மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுசென்ற 3.5 கிலோ தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்தனர்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக, பறக்கும்படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும்படை குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 3.5 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
காரில் வந்தவர்களிடம் 3.5 கிலோ தங்கத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.