பதவிக்காக அதிமுகவினர் துரோகிகளுடன் கூட்டணி வைத்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டார்.
ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார். செய்துங்கநல்லூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர், வேனில் இருந்தவாறு பேசியது: ஓட்டப்பிடாரம் தொகுதியின் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியாளர்கள் நன்றி மறந்துவிட்டனர். இரட்டை இலை சின்னம் இருந்தால் வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர். அன்று இரட்டை இலை சின்னம் எம்ஜிஆர், ஜெயலலிதா கையில் இருந்ததால் தொடர் வெற்றி கிடைத்தது.
தற்போது, நன்றி மறந்தவர்களிடம் இரட்டை இலை இருப்பதால் எந்தப் பலனும் கிடைக்க போவதில்லை. ஜெயலலிதா படத்தை பேரவையில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த தேமுதிக, ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக, மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை நலம் விசாரிக்காத மோடியின் பாஜகவுடனும் இவர்கள் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியை காப்பாற்ற திட்டமிடுகின்றனர். ஓட்டப்பிடாரம் தொகுதி உள்பட 4 தொகுதியில் இடைத்தேர்தலில் அதிமுகவை வீட்டுக்கு அனுப்ப வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, வி.கோவில்பத்து, நாட்டார்குளம், விட்டிலாபுரம், வள்ளுவர்காலனி, அனவரதநல்லூர், வசவப்பபுரம், அம்பேத்கர்நகர், முறப்பநாடு , வல்லநாடு உள்பட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். வேட்பாளர் சுந்தர்ராஜ், கட்சியின் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, மாநில ஜெயலலிதா பேரவை செயலர் மாரியப்பன் கென்னடி, மாநில எம்ஜிஆர் மன்றத் தலைவர் லெனின் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.