சென்னை கிண்டி பாம்பு பண்ணையில் உள்ள அரிய வகை இனமான தென்கிழக்காசிய மலைப் பாம்பு 40 முட்டைகளை இட்டு அடைகாத்து வருகிறது.
சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை சார்பில், 1972 -இல் கிண்டியில் பாம்புப் பண்ணை தொடங்கப்பட்டது. ஒரு ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்தப் பாம்புப் பண்ணையில் 23 வகையான பாம்புகள், 3 வகையான முதலைகள், 3 வகை கடல், சதுப்பு நில ஆமைகள், 2 வகையான பல்லிகள் ஆகியவை பராமரிக்கப்படுகின்றன. இந்தப் பாம்புப் பண்ணைக்கு தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
40 முட்டைகள்: இந்தப் பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் அரிய வகை இனமான தென்கிழக்காசிய மலைப்பாம்பு 40 முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறது. இதுகுறித்து கிண்டி பாம்புப் பண்ணை நிர்வாகிகள் கூறுகையில், தென்கிழக்காசிய நாடுகளில் அதிகம் காணப்படும் நஞ்சற்ற இந்த வகை பாம்புதான் உலகின் நீளமான பாம்பு என்று கூறப்படுகிறது. இங்கு பராமரிக்கப்பட்டு வரும் 41 வயது மதிக்கத்தக்க ருக்மணி என்ற மலைப் பாம்பின் குட்டிதான், தற்போது முட்டையிட்டுள்ள பெயரிடப்படாத இந்த மலைப் பாம்பு.
25 வயது மதிக்கத்தக்க இந்தப் பாம்பு 14.5 மீட்டர் நீளமும், 28 கிலோ எடையும் கொண்டதாகும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் முட்டையிடத் தொடங்கிய இந்தப் பாம்பு தற்போது வரை 40 முட்டைகள் இட்டுள்ளது.
60 -70 நாள்கள் அடைகாக்கும் காலம் கொண்ட இந்தப் பாம்பு இன்னும் 40 -50 நாள்களுக்குள் குஞ்சு பொறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை உணவு ஏதும் இந்தப் பாம்பு உட்கொள்ளாது. கடந்த முறை 40 முட்டைகள் இட்ட இந்த மலைப்பாம்பு 12 குட்டிகளை ஈன்றது குறிப்பிடத்தக்கது.