கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவில் தனியார் கல்லூரிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் சுயநிதி கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்களாக பேராசிரியர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் 3 ஆயிரத்து 298 மாணவர்களையும் 220 ஆசிரியர்களை மட்டுமே கொண்ட பல்கலைக்கழகத்தின் சார்பில் 5 பேராசிரியர்கள் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
ஆனால், 2 லட்சம் மாணவர்களையும், 15 ஆயிரம் ஆசிரியர்களையும் கொண்ட 122 தனியார் கல்லூரிகளின் சார்பில் இரண்டு முதல்வர்கள், இரண்டு பேராசிரியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். இது முறையற்றது. எனவே பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவில் தனியார் கல்லூரிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட கால கட்டத்தில் 22 உறுப்பு கல்லூரிகள் இருந்தன.
அந்தச் சமயத்தில், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவில் இரண்டு முதல்வர்களும், இரண்டு பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால், தற்போது கல்லூரிகளின் எண்ணிக்கை 122-ஆக உயர்ந்துள்ளது. எனவே, தனியார் கல்லூரிகளுக்கான போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதி, இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோர் வரும் ஜூன் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.