திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூரில் அமைந்துள்ள பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோயிலின் உற்சவர் சிலை பீடத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி. ரமேஷ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் உற்சவ மூர்த்தி சிலையின் பீடத்தின் அடிப்பகுதியில் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளதாக திருச்சி சரக சிலை கடத்தல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு புகார் வந்தது. இதையடுத்து, டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையில் நான்கு பேர் கொண்ட சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்து சிலையை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாக அலுவலர் நந்தகுமார், கோயில் குருக்கள் கந்தசாமி, சுவாமி சிலையை தூக்கிச் செல்பவர்கள், பக்தர்களிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து டி.எஸ்.பி. ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு அறிக்கையை மேலதிகாரியிடம் சமர்ப்பிப்போம். அடுத்தக் கட்டமாக, தடய அறிவியல் நிபுணர் குழுவை அனுப்புவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வர் என்றார்.