பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது: ஈரோடு மாவட்டம் முதலிடம்!  

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் மாணவிகளில் 96.5% பேரும்,
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது: ஈரோடு மாவட்டம் முதலிடம்!  


தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் மாணவிகளில் 96.5% பேரும், மாணவர்களில் 93.3% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பிளஸ் 1 பொதுத் தேர்வு  தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 6 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 7,278 பள்ளிகளில் இருந்து 8, 16, 618 மாணவ,  மாணவியர் மற்றும் 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,21, 650 பேர் புதிய பாடத் திட்டத்தில் முதல் பொதுத் தேர்வினை எழுதினர்.  

அதேபோன்று கடந்த ஆண்டு மார்ச்  மற்றும் ஜூன் மாதங்களில் பிளஸ் 1 பொதுத் தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாமல் இந்த ஆண்டு  பிளஸ் 2 படித்த 84,332 பள்ளி மாணவர்கள்,  தேர்ச்சி பெறாத பாடங்களை பழைய பாடத் திட்டத்திலேயே மீண்டும் மார்ச் 2019 பிளஸ் 2 பொதுத்தேர்வின்போது தேர்வு எழுதினர்.

மேலும் கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வராக தேர்வெழுதி தேர்ச்சி பெறாத 690 தேர்வர்கள் இந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்திலேயே பிளஸ் 1 பொதுத்தேர்வினை எழுதினர்.  

இந்த நிலையில், பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள், நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in   ஆகிய இணையதள முகவரிகளில் வெளியானது. 

கடந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.3% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 95% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகளில் 96.5% பேரும், மாணவர்களில் 93.3% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 90.6% மாணவ, மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.9% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,634 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

முதலிடம்: ஈரோடு மாவட்டம் 98% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 97.6% தேர்ச்சியுடன் கோவை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பப்பட்டு வருகிறது. தனித் தேர்வர்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணின் குறுஞ்செய்தியில் தெரிந்துகொள்ளலாம். 

மதிப்பெண் சான்றிதழ்:  பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசுத் தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்.

தேர்வர்கள் மே 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். 

தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தங்களது பிறந்த தேதி,  பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மே 10 (வெள்ளிக்கிழமை), 11 (சனிக்கிழமை) , 13 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com