விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.88.51 கோடி கடன் பெற்று மோசடி: சர்க்கரை ஆலை அதிபரிடம் விசாரணை

விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.88.51 கோடி கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக தனியார் சர்க்கரை ஆலை அதிபரிடம் கடலூர் மாவட்ட


கடலூர்: விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.88.51 கோடி கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக தனியார் சர்க்கரை ஆலை அதிபரிடம் கடலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர். 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கடலூர் மாவட்டம், இறையூரில் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலையும், ஏ.சித்தூரில் திருஆரூரான் சர்க்கரை ஆலையும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளின் நிர்வாக இயக்குநராக, சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ராம்.வி.தியாகராஜன் (68) உள்ளார்.  

இவரது சர்க்கரை ஆலைகள் மூலம், 11,523 கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்துள்ளார். இந்த நிலையில், விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளில் கரும்பு விவசாயிகளின் பெயரில் அவர்களுக்குத் தெரியாமல் தியாகராஜன் ரூ.88.51 கோடி வரை கடன் பெற்றுள்ளார்.

 ஆனால், கடன் தொகையை ஆலை நிர்வாகம் வங்கியில் செலுத்தாததால் வங்கி நிர்வாகம் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது. அதன்பிறகே, தங்களது பெயரில் ஆலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டது விவசாயிகளுக்கு தெரியவந்தது. மேலும், விவசாயிகள் புதிய கடன் வாங்கவோ, ஏற்கெனவே வைத்திருந்த நகைகளை திருப்பவோ முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒருவரான வேப்பூர் அருகேயுள்ள கச்சிமயிலூரைச் சேர்ந்த சண்முகம் மகன் ஸ்டாலின் (36) என்பவர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் புகார்  அளித்தார்.   இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு ஆட்சியர் பரிந்துரைத்தார்.  தொடர் விசாரணையில், கரும்பு விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் தியாகராஜன் கடன் பெற்றிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னைக்கு சென்ற தனிப் படையினர் தியாகராஜனை விசாரணைக்காக கடலூருக்கு புதன்கிழமை அழைத்து வந்து, அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, நிர்வாகத்தின் காப்புறுதியுடன் கரும்பு வெட்டுக்கூலிக்காக விவசாயிகள் பெயரில் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு பொறுப்பேற்பதாகவும், எனவே, வங்கிக்கு சேர வேண்டிய தொகையை செலுத்திவிடுவதாகவும் தியாகராஜன் ஒப்புக்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com