சென்னை: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு, துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று, அதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றில் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமானது, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் 'தடை விதிக்க மறுத்து இருப்பது வரவேற்கத்தக்கது'.
அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநரை உடனே திரும்பப்பெற வேண்டும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.