உடுமலையில் பெய்த கனமழை காரணமாக திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வியாழக்கிழமை அதிகாலை நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் வியாழக்கிழமை அதிகாலையில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதைத் தொடர்ந்து வெய்யிலின் தாக்கம் குறைந்து நகரில் பகலில் குளிர்க் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடுமலை நகரைப் போலவே அருகில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் மழை பெய்தது.
உடுமலை அருகே புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமண லிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்யவும், பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அன்றாடம் வருகின்றனர்.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் பெய்த கன மழையால் பஞ்சலிங்கம் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.