தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 110 டிகிரி வெப்பம்
பதிவானது.
வேலூரில் 109 டிகிரி, திருச்சி, சேலம், பாளையங்கோட்டை, கரூர்பரமத்தி, சென்னை மீனம்பாக்கத்தில் தலா 104 டிகிரி, மதுரை விமானநிலையத்தில் 103 டிகிரி, நாகப்பட்டினம் 102 டிகிரி, கடலூரில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
சனிக்கிழமை (மே 11) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு: காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, நாமக்கல், திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 102 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.