4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் வசவப்புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) மாலை 5 மணியளவில் வல்லநாடு, தெய்வச்செயல்புரம், சவலாப்பேரி, ஒட்டநத்தம், ஒசநூத்து வழியாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முதல்வர் பழனிசாமி பேசுகையில்,
டிடிவி தினகரனுக்கு பதவியும், விலாசமும் கொடுத்தது அஇஅதிமுக தான். அவரை இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்து நாடாளுமன்ற உறுப்பினராக்கியதும் அதிமுக தான். எனவே அவருக்கு அடையாளம் வழங்கியதே அதிமுக தான். ஆனால், இன்று அதே அதிமுக-வை அழிப்பதாக நினைத்து எதிரியுடன் இணைந்து செயல்படுகிறார்.
இந்த நாட்டை விட்டே விரட்டியடிக்கப்பட வேண்டிய தீயசக்தி திமுக என மறைந்த முதல்வர் எம்ஜிஆர் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட கட்சியுடன் தான் தற்போது கூட்டணி சேர்ந்து செயல்படுகிறார்.
திமுகவும், அமமுகவும் ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளனர். நேரில் பார்த்தால் எதிரியாகவும், மறைமுகமாக ஒற்றுமையாகவும் உள்ளனர். இந்த தேர்தலில் அமமுக போட்டியிடுவது அவர்கள் வெற்றி பெற அல்ல, திமுகவை வெற்றிபெற செய்வதற்கு தான் என்று விமர்சித்தார்.