திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் போக்குவரத்து சிக்னல் கம்பம் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருந்து வருவதால் விபத்து ஏற்படும் அபயாம் உள்ளதாக ஓட்டுநர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலை வழியாக நாள்தோறும் ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதுபோன்று செல்லும் வாகனங்களை விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும், ஒழுங்குபடுத்தும் நோக்கத்தில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிக வாகனங்கள் செல்லும் வகையில் சிக்னலை அகற்றாமல் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் போக்குவரத்து சிக்னல் கம்பம் சாலைப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருந்து வருகிறது. ஏற்கெனவே திருவள்ளூர்-திருப்பதி சாலையில் இருந்து பிரிந்து செல்லும் ஊத்துக்கோட்டை சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவு நேரங்களில் இச்சாலையில் வரும் போது வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சிக்னல் இருந்து வருகிறது. ஒரு சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் இருட்டில் வரும் போது சிக்னல் கம்பத்தில் மோதியும் விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் வகையில் சிக்னல் கம்பத்தை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.