தமிழகத்தின் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை 8 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, திருச்சி, திருத்தணி, வேலூரில் தலா 106 டிகிரி வெப்பநிலை பதிவானது. மதுரை விமானநிலையத்தில் 105 டிகிரி, பாளையங்கோட்டையில் 104 டிகிரி, சேலம், சென்னை மீனம்பாக்கத்தில் தலா 102 டிகிரி, நாமக்கலில் 101 டிகிரி வெப்பநிலை பதிவானது. தொண்டியில் 99 டிகிரி பதிவானது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:
தமிழகத்தில் சில இடங்களில் திங்கள்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஓரிரு இடங்களில் மழையும் பெய்தது. இதே நிலை தொடரும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 14) அனல் காற்று வீசும்.
மிதமான மழை: தெலங்கானாவில் இருந்து உள்தமிழகம் வழியாக குமரிக்கடல் வரை காணப்படும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, தமிழக கடலோரத்தில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 14) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதவிர, ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னல் காணப்படும் என்றார்.