மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 4.95 கோடி மோசடிசெய்ததாக புதுச்சேரியைச் சேர்ந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சென்னை, கோடம்பாக்கம், ரங்கராஜபுரத்தில் வசிப்பவர் செந்தில்நாதன் (40). இவர், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் அண்மையில் புகார் அளித்தார். அதில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சியாளராகவும், நீட் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருப்பதாகக் கூறி நாகராஜ் என்பவர் எனக்கு அறிமுகமானார்.
தனது பதவியைப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக என்னிடம் கூறினார்.இதை நம்பி, எனது சகோதரியின் மகன், உறவினர்கள், நண்பர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தர நாகராஜிடம் ரூ.4.95 கோடி பணம் கொடுத்தேன். ஆனால், நாகராஜ் கூறியதைப் போல மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருவது போன்று போலியான ஆவணத்தைக் காண்பித்து நம்ப வைத்து ஏமாற்றி வந்தார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார், புதுச்சேரி மாநிலம், சின்னக்காலபெட் பகுதியைச் நாகராஜை திங்கள்கிழமை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாகராஜ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.