வாக்களித்த விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதிகளுக்கு கடந்த 18-ஆம் தேதி தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் வாக்களித்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக சிவகார்த்திகேயனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் பட விழா சென்னையில் திங்கள்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நான் இந்த நாட்டின் குடிமகன். வாக்களிக்கும் உரிமை பெற்றவன். பல தேர்தல்களில் வாக்களித்திருக்கிறேன். அதேபோன்று இந்தத் தேர்தலிலும் வாக்களிக்கச் சென்றேன். வாக்குச்சாவடியில் எனது அடையாள அட்டையை காண்பித்தேன், வாக்குச்சாவடி அதிகாரிகள் பட்டியலில் பெயர் இல்லை என்றார்கள்.
ஆனாலும், வாக்களிக்க அனுமதித்தார்கள் அதன்பேரில் வாக்களித்துவிட்டு திரும்பினேன். இதில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறல்ல. அது என் பிரச்னையும் அல்ல. எந்த அதிகாரியும் என்னிடம் விசாரணை நடத்தப் போவதாக கூறவும் இல்லை. நடத்தவும் இல்லை.
நான் கள்ள ஓட்டுபோட்டதாக செய்தி வந்தது வருத்தம் அடைய வைத்தது. நான் எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன் என்றார் சிவகார்த்திகேயன்.